மட்டக்களப்பில் பயணத்தடையினால் தொடர்ந்து அமைதி


பயணத்தடை இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரனா தொற்றின் வேகம் நாடளாவிய ரீதியில் அதிகரித்துச்செல்வதன் காரணமாக அதிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியான பயணத்தடை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது நாளாகவும் பயணத்தடை காரணமாக சகல பகுதிகளும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன.

குறிப்பாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துச்செல்வதன் காரணமாக சுகாதார துறை மற்றும் பொலிஸார்,முப்படையினர் இணைந்து தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதிலும் பொதுமக்களில் பலர் சுகாதார நடைமுறைகளை பேணாத காரணத்தினால் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லுவோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன் அதனை மீறிச்செயற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.