தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு மாகாண பொது மக்கள்,சிவில் அமைப்புகள்,அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளிளல் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து,தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் போன்று சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு முன்வைக்கப்பட்டது.
இந்த நாட்டில் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமா,இந்த நாட்டின் சட்டங்கள் ஒரு இனத்திற்கு மட்டுமா,அரசியல் கைதிகளின் விடுதலையில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்ற பல்வேறு கேள்விகள் அரசாங்கத்திடம் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,மதகுருமார்கள்,மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டங்களை பயன்படுத்தி இந்த நாட்டில் எவரையும் எவ்வளவு காலமும் விசாரணையின்றி தடுத்து வைக்கமுடிகின்றது.அரசாங்கம் ஐநா சபையின் நிலைமாறுகால நீதியில் கையெழுத்திட்டுள்ளதன் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை அரசியலமைப்பில் நல்ல சட்டங்கள் உள்ளன.அவற்றினை அமுல்படுத்தி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை பேணமுடியும் எனவும் பயங்கரவா தடைச்சட்டம் காலம்காலமாக ஒரு இனத்தினை பழிவாங்கவே பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமாகவும் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமாகவும் இந்த அரசாங்கம் நடாத்துவதாக இதில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
போராட்டத்தினை தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஐநா மனித உரிமைகள்பேரவை ஆகியவற்றிற்கான மனுக்கள் அனுப்பிவைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு இணைப்பாளர் ஆகியோரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.