தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருக்கு விளக்கமறியல்

பொன்.நவநீதன்
குற்றப்புலனாய்வுத்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை-பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.

ஆரையம்பதியிலுள்ள தனது வீட்டில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியில்2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது. 

இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில் கீழ் 2019ஆம் ஆண்டு மே மாதம் சாட்சியங்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் அதிகாரசபையில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.அது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் கீழ் இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரசாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது  எதிர்வரும் 23 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரீ.எம்.வி.பி கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் 2005 ஆண்டு இடம்பெற்ற படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளமை கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.