மஞ்சந்தோடுவாய் யுனானி வைத்தியசாலையில் இடம்பெறும் பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தயாளக்குமார் கௌரி

 மட்டக்களப்பு மஞ்சந்தோடுவாய் யுனானி ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்  தயாளக்குமார் கௌரி சபையில் வேண்டுகோள்.


மட்டக்களப்பு மாநகர சபையின் 39வது சபை அமர்வானது இன்று (12) வியாழக்கிழமை காலை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதம கணக்காளார் ஹெலன் சிவராஜா மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் மட்டக்களப்பு மஞ்சந்தோடுவாய் யுனானி ஆயுர்வேத
வைத்தியசாலையில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் பெண் ஊழியர்கள் அண்மையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மற்றும் ஊடாக சந்திப்பொன்றினையும் மேற்கொண்டிருந்ததாகவும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகைகளும் எடுக்கப்படவில்லை என்றும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் தயாளக்குமார் கௌரி சபையில் சுட்டிக் காட்டியிருந்தார்.


பெண்களின் மீதான இவ் வன்முறையினை மதவாதமாக மாற்றும் செயற்பாட்டில் ஒரு சில நபர்கள் ஈடுபட்டு வருவதோடு, சம்பந்தப்பட்ட வைத்தியரை இடமாற்றம் செய்யாமல் தொடர்ந்தும் அங்கு பணி செய்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு  தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் ஒரு குழுவினை அமைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும்  சபையில் தீர்மானத்தினை நிறைவேற்றி இதற்கான அழுத்தத்தினை மாநகர சபையின் ஊடாக வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான துரை மதன் மற்றும் வேலுப்பிள்ளை தவராஜா ஆகியோர் இதற்கு சார்பான தமது கருத்துகளையும் வெளியிட்டிருந்தனர்.

இப் பிரச்சனை மாநகர சபையின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் இதற்கு தீர்மானங்களை நிறைவேற்றாது குறித்த அமைச்சு மற்றும் மாவட்ட செயலாளர் ஊடாக நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவும் மாநகர முதல்வர் இதன் போது பதில் வழங்கி இருந்தார்.