யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரால் துஸ்பிரயோகம் -ஊடக சந்திப்பில் ஊழியர்கள்


மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி தங்கள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்வதாக குறித்த வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இன்று மட்டு.ஊடகத்திற்கு வருகைதந்த குறித்த பெண் உத்தியோகத்தர்களும் ஆண் உத்தியோகத்தர்களும் இது தொடர்பான ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

தமது குடும்ப வறுமையின் காரணமாக வைத்திய அதிகாரியின் பாலியல் தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு தமது கடமையினை முன்னெடுத்துவருவதாகவும் குறித்த வைத்தியசாலயில் கடமையாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் ஆடைமாற்றும் அறையில் திடீர் என நுழையும் வைத்திய பொறுப்பதிகாரி தமக்கு பாலியல் அச்சுறுத்தல் வழங்குவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இடமாற்றம் பெற்றாலும் நீண்ட தூரத்திற்கு செல்லவேண்டியிருப்பதனால் அனைத்தாங்கியும் தாங்கி கடமையாற்றிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றர்.

தாங்கள் ஆடைமாற்றும் அறையில் எந்தவித வசதிகளும் இல்லையெனவும் அறையின் கதவுகள் கூட முறையான கதவு இல்லாமல் இடைவெளிகள் கொண்ட கதவுகள் காணப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துடன் அதனை முறையாக அமைக்கவும் அவர் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தான் ஆடைமாற்றிக்கொண்டிருக்கும்போது கதவினை தள்ளித்திறந்துவந்து தான் ஆடைமாற்றிக்கொண்டிருந்தபோது கதவினை திறந்துவைத்தாகவும் அதன்போது வைத்தியசாலைக்கு வந்திருந்தவர்களும் தன்னை பார்த்ததாகவும் அது தொடர்பில் திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஊழியர் தெரிவித்தார்.

தங்களுக்கு ஆதரவாக இருந்த பெண் வைத்தியரையும் தவறானவராக காட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஊடக சந்திப்பின்போது ஊழியர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் இது தொடர்பில் அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டுசென்றபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுப்படாத நிலையிலேயே இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று வருடமாக இந்த வேதனைகளை அனுபவித்துவருவதாகவும் தங்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் ஆண் ஊழியர்களையும் அங்குள்ள பெண் ஊழியர்களுடன் இணைத்து அபாண்டமான வதந்திகளையும் பரப்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு தமிழ் பெண்கள் மற்றும் இரண்டு சிங்கள பெண்களின் நடத்தை சரியில்லையென்ற வகையில் கருத்துகளை தமது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துவந்ததாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

உயர் அதிகாரியொருவர் இரவு வேளையில் சோதனை நடவடிக்கைக்கு வந்தபோது இரவு கடமையில் வைத்தியர் இல்லாதது தெரியவந்த நிலையில் அதற்கு எதிராக நடவடிக்கையெடுத்தபோது குறித்த உயர் அதிகாரி மதுபோதையில் வந்ததாக கடிதம் ஒன்று எழுதி தருமாறு ஊழியர்களிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தன் காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக பழிவாங்களுக்குள்ளாவதாகவும் இதன்போது ஊழியர்கள் தெரிவித்தனர்.

தன்னை அனுசரித்துபோகாவிட்டால் பழிவாங்கப்படுவீர்கள் என குறித்த வைத்திய பொறுப்பதிகாரி அச்சுறுத்துவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி தமக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் எனவும் தங்களால் சுதந்திரமாகவும் அச்சமின்றிய சூழ்நிலையில் கடமையாற்றுவதற்கான வழியை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.