மக்களுக்கு தொல்லைகொடுத்த முதலையினை பிடித்த மீனவர்கள் -பாலமீன்மடு பகுதியில் சம்பவம்


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவந்த எட்டு அடிநீளமான முதலையொன்று இன்று காலை பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலமீன்மடு நான்காம் குறுக்கு பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் இந்த முதலை மீனவர்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

எட்டு அடி நீளமான இந்த முதலை களப்பு பகுதியில் இருந்துகொண்டு இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைவதாகவும் அப்பகுதிகளில் மேயும் ஆடுகளை பிடித்து உண்டுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த முதலை அப்பகுதி மீனவர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்த நிலையில் இன்று காலை மீனவர்களினால் அந்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அவற்றினை பாதுகாப்பாக மீட்டு கொண்டுசென்றனர்.