மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்த ஜனாதிபதி தலையிட வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மக்கள் தேசிய கட்சி மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை காணிகளை அபகரிக்காதீர்கள்,எங்கள் மேய்ச்சல் தரை நிலம் எங்களுக்கு வேண்டும்,பிரதமரே மாடுகள் உணவு உண்டுவாழ வழியேற்படுத்துங்கள் போன்ற சுலோகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் இலங்கை மக்கள் தேசிய கட்சி செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,கால்நடை வளர்ப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மயிலத்தமடு,மாதவனை உட்பட மேய்ச்சல் தரை பகுதியில் இருந்து காணி அபகரிப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மூன்று தலைமுறைகளாக தாங்கள் குறித்த பகுதியில் கால்நடைகளை வளர்த்துவருவதாகவும் இன்று தங்களை அங்குவரும் பெரும்பான்மையினர் அங்கிருந்து செல்லுமாறு அச்சுறுத்துவதாகவும் மாடு வளர்க்கும் தமது பகுதிகளை உழுது பயிர்செய்வதற்கு முயற்சிப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினையை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர கிழக்கு மாகாணத்திற்கு வேறு பகுதியில் இருந்தவர்களை கொண்டுவந்து குடியமர்த்த தேவையில்லையெனவும் தெரிவித்தனர்.