மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!!!

கொரனா தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிப்படுத்தப்பட்ட 350பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

பொதுமக்கள் தனக்கான பாதுகாப்பினையும் சமூகத்தின் பாதுகாப்பினையும் எமது மாவட்டத்தின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவுடன் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தினை கொரனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.ஊரடங்கு தளர்த்தப்பட்டவேளையில் கிடைக்கப்பெற்ற அனுபவத்தினைக்கொண்டு இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது மட்டக்களப்பு மாநகரசபை பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தவகையில் காணப்பட்டது.அதனை கட்டுப்படுத்தவும் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

பொதுச்சந்தைகளை மூடியுள்ளதன் காரணமாக வீதிகளில் பொருட்களை விற்பவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் விற்பனைசெய்யாமல் நகரின் நான்கு பகுதிகளில் விற்பனை செய்வதற்கும் அங்கு வருவோர் ஒரு மீற்றர் தூரத்தில் சமூக இடைவெளியை ஏற்படுத்தி நின்று தமக்கான பொருட்களை கொள்வனவுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.