இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு; அரசியல் கைதிகள் சிறையில்; ஸ்ரீநேசன் MP காட்டம்

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியிருந்தார். இருந்தும் அவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதியினால் மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் விடுக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக ஜனாதிபதி ஒருபக்க சார்பாக செயற்படுகின்றாரா? என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

ஜனாதிபதி தான் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். தனது பதவியேற்பு நிகழ்வின்போதும் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றிபெறவில்லை. சிறுபான்மை மக்களும் அவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோன்று தேசிய பொங்கல் தினம் நிறுத்தப்பட்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிக செலவு காரணமாக இதை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் விடுக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தனது அதிகாரத்தினை பயன்படுத்தி அவர்களை விடுவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியிருந்தார். எனினும் அவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனினும் தற்போதைய ஜனாதிபதியினால் மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் விடுக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக ஜனாதிபதி ஒருபக்க சார்பாக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத தமிழ் மக்களை பழிவாங்குவதனைவிட, ஏன் அவர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.