ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் முடிவுக்கு வரவேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டவரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் உடனடியாக முடிவவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இதுவரையில் பதிவான அத்தகைய சம்பவங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சர்வதேச மன்னிப்புச்சசை விடுத்திருக்கும் விரிவான அறிக்கை வருமாறு, “இலங்கையில் மனித உரிமைகள் அமைப்புக்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாக வெளிவரும் பல்வேறு செய்திகள் குறித்து நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.
அவ்வறிக்கைகள் அல்லது செய்திகளின் பிரகாரம் 2019 மே மாதம் தொடக்கம் தற்போது வரை அரச அதிகாரிகள், மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வமல்லாத 12இற்கும் மேற்பட்ட விஜயங்களை மேற்கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடிவதுடன், அவற்றை அத்துமீறல் மற்றும் அச்சுறுத்தலாகவே கருதமுடியும்.
இதற்கு மனித உரிமைகள் அமைப்புக்கள், ஊடக செயற்பாட்டாளர்கள் இலக்காக மாறியிருப்பதுடன் அவர்களது செயற்பாடுகள் குறித்து குற்ற விசாரணைப் பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அரச புலனாய்வுச் சேவை உள்ளடங்கலாக இலங்கைப் பொலிஸாரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிக்கப்படுகிறது.
அதன்படி சில ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், சில ஊடக நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இத்தகைய அச்சுறுத்தும் விதமான செயற்பாடுகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்களுக்கும் அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களது செயற்பாடுகளுக்கான பழிவாங்கலாகவும் அமையும்.
எனவே, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் ஊடாக அவர்கள் செயற்திறனுடன் தமது பணிகளை முன்னெடுப்பதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாப்பதுடன் அதற்கு மதிப்பளித்துச் செயற்படுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், நாடளாவிய ரீதியில் இத்தகைய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைப் பிரயோகிப்பதை முடிவிற்குக் கொண்டுவரும் விதமாக சட்டத்தை அமுலாக்கும் அனைத்துக் கட்டமைப்புக்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.
இதுவரையில் பதிவான மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாக பக்கச்சார்பற்றதும், நியாய பூர்வமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்” என மன்னிப்புச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.