செங்கலடி மோகன் ஜனாதிபதிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்-கொழும்பில் சந்திரகுமார் முறைப்பாடு


செங்கலடி மோகன் ஜனாதிபதிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்-கொழும்பில் சந்திரகுமார் முறைப்பாடு


இன கலவரத்தை தூண்டும் சக்திகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு ரஅமைச்சர் சமல் ராஜபக்ச அவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் வைத்து பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் அண்மையில் நான் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்தை திரிவு படுத்தி என் மீதும் எனது கட்சியின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் தமிழ் உணர்வார்கள் அமைப்பின் தலைவர் என்று கூறும் மோகன் அவர்கள் செய்திகளை பரப்பி வருகிறார்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் தனது தியேட்டரில் கூட்டம் ஒன்றை நடத்திய மோகன் அவர்கள் செங்கலடி தமிழர் பகுதியில் வியாபாரம் செய்யும் முஸ்லீம் வியாபாரிகளை இனிமேல் வியாபாரம் செய்ய வரக்கூடாது என்று கூறி தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையில் இன கலவரத்தை தூண்டி அரசியல் செய்ய முற்பட்டிருந்தார். அதுவும் அதனை எமது அரசாங்கம் முன்நின்று நடத்துவதாக காட்டுவதற்கு எமது கட்சியுடன் இணைந்து செயற்படும் சிலரை சேர்த்துக்கொண்டு அந்த கூட்டத்தை நடத்தியிருந்தனர். இதன் ஊடாக கௌரவ ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் ஆட்சி முஸ்லீம் மக்களுக்கு எதிரான  செயற்பாடுகளுக்கு எதிராக தோற்றப்பாட்டை ஏற்படுத்தி எமது அரசாங்கத்தை கலங்கப்படுத்த முற்பட்டனர். இது குறித்து என்னிடம் பலர் முறையிட்டதன் காரணத்தினால் முஸ்லீம் மக்கள் வழமை போல் தமிழ் மக்களின் பகுதிகளில் வியாபாரம் செய்யலாம் அதனை யாரும் தடுத்தால் என்னிடம் முறையிடுமாறு கூறியிருந்தேன்.

அதில் நான் எந்த இடத்திலும் முஸ்லீம்கள் தமிழர் பகுதிகளில் காணி வாங்கலாம் கடை வாங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை எனவே எனது கருத்தை திரிவு படுத்தி அரசியல் செய்ய முயற்சிக்கும் மோகன் அவர்களிடம் நான் கேட்கிறேன். கடந்த பல வருடங்களாக நீங்கள் ஆதரவு தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இருந்த போது ஏன் நீங்கள் இதனை செய்ய வில்லை. தமிழ் உணர்வார்கள் அமைப்பு என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கு காணிகளை விற்றதும், மண் அனுமதி பத்திரம் பெற்றதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வால்பிடித்து திரிந்தது மட்டுமே.  இன்று எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாது இனக்கலவரத்தை தூண்டி விட்டு எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்க இவர் நாடகமாடுகிறார். தங்களது சுயநல அரசியலுக்காக தமிழ் முஸ்லீம் மக்களை மோத விட்டு வேடிக்கை பார்க்க நாம் அனுமதிக்க முடியாது.

இவர்கள் கடந்த காலங்களில் எப்படி எப்படி எல்லாம் தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு இலாபம் அடைந்தார்கள் என்பதை வெகு விரைவில் வெளியிட உள்ளோம்.

இவரின் காணி ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் குறித்தும். இன கலவரங்களை தூண்டும் படியான இவரது செயற்பாடு கூறித்து விசாரணை நடத்துமாறு நான் இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சாமல் ராஜபக்ச அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் வெகு விரைவில் இது குறித்து விசாரணைகளை ஆரம்பிப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார். எனவே மக்களை குழப்பி அரசியல் இலாபமடையும் மோகன் போன்றவர்களிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் கூறியுள்ளார்.