செங்கலடி பிரதேச செயலாளர் எங்களை பழிவாங்குகிறார்! ஜனாதிபதியை தலையிடுமாறு கதறும் தகப்பன்!!



எனது மகனின் அரை ஏக்கர் காணியை பிரதேச செயலாளர் அபகரிக்க முயற்சி செய்கிறார் புதிதாக வந்துள்ள ஜனாதிபதியே இதற்கு தீர்வு பெற்று தரவேண்டும் என உறுகாமத்தைச் சேர்ந்த மாவீரரின் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.


தனது மகனுக்கு நடந்த அநீதி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் எனது மகனது பெயருக்கு வழங்கப்பட்ட  அரை ஏக்கர் காணியில் இருந்து எனது மகனை வெளியேறச் சொல்லி செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நான் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றதற்காக எனது மகனை  பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களம் செங்கலடி பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் எனது மகனின் காணியை அவருக்கு வழங்குமாறு கோரியுள்ளது.
அத்துடன் நான்கு வருடங்களுக்கு முன்னர்  காணி ஆணையாளர் நாயகத்தின் 2008/04 சுற்று நிரூபத்தின் படி வழங்கப்பட்ட காணிக்கு வழக்கு தாக்கல் செய்தமை காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24 இன் பிரகாரம் முற்றிலும் விரோதமானது எனவும். செங்கலடி பிரதேச செயலாளர் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார். அத்தோடு எனது மகனின் காணிக்கான அனுமதி பத்திரத்தை உடனடியாக வழங்குமாறும் அதில் கூறியுள்ளார்கள். ஆனால் அதை எனது மகனுக்கு வழங்காது நீதிமன்றத்தில் எனது மகனை காணியில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்ற கட்டளை அனுப்பி உள்ளார்.

ஐம்பது, அறுபது ஏக்கர் அரச காணிகளை பிடித்திருப்பவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத பிரதேச செயலாளர் எனது மகனுக்கு கொடுத்த அரை ஏக்கர் காணியில் இருந்து வெளியேற சொல்கிறார்.
நான் யுத்தத்தினால் ஒரு மகனை இழந்து மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் எனது பிள்ளைகளை வளர்த்து நாங்கள் பரம்பரை பரம்பரையாக பராமரித்து இருந்து வந்த ஒரு ஏக்கர் காணியை எனது பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தால். இன்று அந்த காணியை பறிக்க முற்படுகிறார்கள்.
இதற்கு புதிதாக வந்துள்ள ஜனாதிபதி அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எமக்கு நீதியை பெற்று தரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.








(நன்றி-தமிழ்வின்)