வெள்ளத்தால் தனிமைப்படுத்தபட்ட கிராமங்களுக்கான நிவாரண பொதிகளை வழங்கிய ஸ்ரீநேசன் MP

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார். 

இதன்படி ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குள் வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலுக்குப் பொத்தானை, முந்தன் குமாரவெளி மற்றும் மயிலவட்டவான் கிராம மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. 

இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் சபையினரின் நிதி உதவியில் சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் ஊடாக கிட்டத்தட்ட 165 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் பகிர்தளிக்கப்பட்டன. 

ஈரளக்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட முந்தன் வெளி, இலுக்குப் பொத்தானை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இம்முறை வெள்ள அனர்த்தத்தின் போது தரைவழிப் பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை நிலையில் படகு மற்றும் உளவு இயந்திரத்தின் துணையுடன் 90 குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் மயிலவட்டவான் கிராமத்தினைச் சேர்ந்த 75 குடும்பங்களுக்கான உதவிகளும் இதன்போது வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



மேற்படி நிவாரணப் பொதிகளை மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் வாலிபர் முன்னனியின் துணைத் தலைவருமான துரைசிங்கம் மதன், மாநகர சபை உறுப்பினர் பு.ரூபராஜ், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன், கிராம சேவையாளர் கமலரூபன் மற்றும் சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் தொண்டர்கள், கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோரும் இணைந்து வழங்கி வைத்தனர்.