மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஏறாவூர் பற்று மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளிற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் பல திறக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று (22.12.2019) மாலை வரை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் 312 குடும்பங்களைச் சேர்ந்த 1072 பேர் வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயத்திலும், வந்தாறுமூலை மேற்கில் 185 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 53 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் ரெஜி கலாசார மண்டபத்திலும், சந்திவெளி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர் சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.