உன்னிச்சை குளம் அருகில் திருவள்ளுவர் சிலை

மட்டக்களப்பின் மிகப்பெரும் நீர்ப்பாய்ச்சல் குளமாக உன்னிச்சைகுளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மண்முனை மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சி.குகநாதனின் முயற்சியினால் இந்த திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

உன்னிச்சைகுளம் பகுதி சுற்றுலா மையமாக மாறிவரும் நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் வருகைதருவதனால் தமிழர்களின் அடையாளத்தினை வெளிப்படுத்தும் வகையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா இன்று காலை உன்னிச்சை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஆர்.விஜயரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை,மண்முனை மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள்,கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.