தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்டவர்களில் இருவருக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63பேரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 61பேரின் விளக்கமறியல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஜனவரி 14ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.

இவர்களிலஇருவர் சஹ்ரானின் சகோதரர்களின் மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இருவர் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.