களுதாவளை கடலில் காணாமல்போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற் பகுதியில் நேற்று மாலை குளிர்ப்பதற்காக சென்று காணாமல்போன இளைஞனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறு கடலில் காணாமல் போனவர் களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என தெரியவந்துள்ளது.
நேற்று மாலை களுதாவளையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் நண்பர்களாக இணைந்து கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ளனர்.

இவ்வாறு குளித்துக் கொண்டிருக்கும்போது அருகில்நின்று குளித்துக் கொண்டிருந்த தமது நண்பர் கடலலையில் அள்ளுண்டுபோவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளனர்.

பின்னர் அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர் உடன் ஸ்தலத்திற்கு விரைந்த கடற்படையினரால் இளைஞனைக் கண்டுபிடிக்க  முடியவில்லை.

இவ்வாறு கடலில் அள்ளுண்டுபோன இளைனை மீனவர்களும், கடற்படையினரும் தொடர்ந்து கடலில் தேடி வருகின்றனர்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.