சாதனையாளர்களை கௌரவித்த தென்னிந்திய பிரபலங்கள்

மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் லண்டன் அகிலன் பவுண்டேசனும் இணைந்து நடாத்தும் சாதனையாளர் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (06-10)சிறப்பாக நடைபெற்றது.

கல்வி,விளையாட்டு,ஊடகத்துறை ஆகியவற்றில் உள்ளவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் தேசமானிய லயன் வ.இ.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் சினிமா உலகின் இயக்குனர் இமயமாக கருதப்படும் பெ.பாரதிராஜா,இயக்குனரும் நடிகருமான அமீர்; ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது சாதாரண தரம் தொடக்கம் உயர்தரம் வரையிலும் விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சிறப்பாக செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது விசேட தேவையுடைய பிள்ளைகளின் கலை நிகழ்வுகள் பல நடைபெற்றதுடன் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் வறிய மக்களுக்கான உதவிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.