மண்முனைப்பற்று சுகாதார ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

மண்முனைப்பற்று சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டு பகுதியான புதுக்குடியிருப்பு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு செல்லும் வீதி கடும் மோசமான நிலையில் இருப்பதால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேசசபை செயலாளர் மற்றும் தவிசாளரின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டுவந்திருந்தபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியால் குப்பைகளைக்கொண்டுசெல்லும்போது வாகனங்கள் அடிக்கடி கவிழ்வதன் காரணமாக தாங்கள் தினமும் உயிரை பணயம் வைத்து சேவையாற்றவேண்டிய நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தமது பழுதடையும் வாகனங்களை திருத்துவதிலும் வாகனங்களுக்கு தேவையானவற்றை செய்துதருவதிலும் பிரதேசசபை இழுத்தடிப்பு செய்துவருவதாகவும் சுகாதார ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமது கோரிக்கைகளை பிரதேசசபையில் உள்ள உரியவர் விரைவாக தீர்த்துவைக்க முன்வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேநேரம் இன்று மண்முனைப்பற்று பிரதேசசபையின் விசேட அமர்வு ஒன்று நடைபெறுகின்றபோதிலும் அது தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு சபை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் இன்று காலை குப்பைகள் சேகரிக்கப்படாத காரணத்தினால் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.