வெல்லாவெளியில் நீரோடு போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி வாய்க்கால்  பகுதியில்  நீராடச்சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி 35ஆம் கிராமத்தில் உள்ள நவகிரி வாய்க்கால் ஒன்றில் நேற்று மாலை ஆறு இளைஞர்கள் நீராடியுள்ளனர். இதன்போது குறித்த பகுதியில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டுவந்த வேளை இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி குறுமண்வெளி - 12 இல் வசித்துவந்த 39 வயதுடைய சு.சந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நீரில் காணாமல்போனமை தொடர்பில் அங்கிருந்த நான்கு இளைஞர்களும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.