தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் கல்லடிப் பாலத்தில் சகாச பூங்கா – சபையில் அனுமதி


மட்டக்களப்பு மாநகர சபையின் 17ஆவது பொது அமர்வானது நேற்றைய தினம் (04.04.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமர்வில், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர், மாநகர உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அமர்வு ஆரம்பமான போது பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள் சபையிலிருந்து ஒருவர் பின் ஒருவராக வெளி நடப்பு செய்திருந்த நிலையிலும், அமைதியான முறையில் பல பிரேணைகள் முன் வைக்கப்பட்டு ஏனைய 30 உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
மாநகரசபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொறுப்பேற்று ஒருவருடங்கள் பூர்த்தியடைவதால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பிலும், அவற்றின் முன்னேற்றம் தொடர்பிலும் முதல்வர் தனது தலைமை உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் கல்லடிப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உரிய இடமாக மாற்றிக் கொள்ளும் வகையில் அங்கு சாகச பூங்கா (Adventure Park) ஒன்றினை உருவாக்குவதற்கான திட்ட முன்மொழிவுக்கான அனுமதி குறித்த திணைக்களங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகர முதல்வர் சபையில் தெரிவித்தார். இது விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்பதுடன் இதனால் எதிர் காலத்தில் அவ்விடத்தில் உயிரை மாய்க்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்
அத்துடன் நிதிக்குழு, நூலகக் குழு மற்றும் சிறுவர் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்பேணும் குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் உயிரிழப்புகள் தொடர்பில் அதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான பிரேரணை ஒன்றும் மாநகர உறுப்பினர் செல்வி.தயாளகுமார் கௌரி அவர்களால் கொண்டுவரப்பட்டு சபையில். ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.