பொலநறுவை சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

பொலநறுவை சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று இரவு அங்கு கடமையாற்றும் பெரும்பான்மை சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் இருந்த பெரும்பான்மையின சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நான்கு பேர் இணைந்து இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக பொலநறுவை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,கிரான் பிரதேசத்தினை சேர்ந்த பி.பத்மகம்சன் என்னும் சிறைச்சாலை உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதுடன் தாக்கப்பட்டவர் இன்று வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது எங்கட நாடு இங்கு உங்களுக்கு என்னடா வேலை என்று கேட்டுகேட்டு தன்னை தாக்கியதாகவும் தனது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் காயமடைந்த பத்மகம்சன் தெரிவித்தார்.

பல காலமாக பொலநறுவை சிறைச்சாலையில் கடமையாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு பெரும்பான்மை உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தல் விடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.