மட்டக்களப்பு தமிழுக்கு மகுடம்;சூட்டும் தென்னிந்திய நடிகர் விவேக்

சுத்தமான தமிழ் உலகமெங்கும் வாழ்வதற்கு காரணம் இந்த மட்டக்களப்பு மண்ணில் இருந்துசென்றவர்களெ காரணம் என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்தார்.

அனைத்து வளங்களையும் கொண்டு ஆசிர்வதிக்கப்பட்ட பூமியாக இலங்கை காணப்படுவதாகவும் நடிகர் விவேக் இங்கு தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஒற்றுமை மட்டும் ஏற்பட்டால் இந்த நாட்டினை எந்த நாட்டினாலும் வெல்லமுடியாத நிலையுருவாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் சின்ன கலைவாணர் எனப்படும் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கலந்து சிறப்பித்தார்.

மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்புரையாற்றும் வகையில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானம் நிரம்பிய சனக்கூட்டத்துடன் இதன்போது விவேகானந்தர் n தாடர்பில் நடிகர் விவேக் சிறப்புரையாற்றினார்.

இதன்போது விவேகானந்தரின் நூல் தொகுதியொன்றும் நடிகருக்கு சுவாமிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

இலங்கையில் தூய்மையான தமிழ் பேசுவோர் வாழ்வதாகவும் அதிலும் மட்டக்களப்பு தமிழர்களின் தமிழே தூய்மையான தமிழாகவும் செந்தமிழாகவும் தான் நோக்குவதாகவும் விவேக் இதன்போது குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நடிகர் விவேக்,

ஒவ்வொரு சினிமா நடிகர்களும் பேசும் வசனங்களுக்கு இரசிகர்கள் மத்தியில் பெருமளவான ஆதரவு கிடைக்கின்றது.அதேபோன்று உலகெங்கும் வாழும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி உலகத்தில் உள்ள மதங்களின் பிரதிநிதிகள் எல்லாம் வந்து ஒன்றுகூடி சர்வ சமய சபை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றை பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது இந்தியாவில் இருந்து சென்று அந்த சபையில் யாராலும் கண்டுகொள்ளப்படாதவர் பேசிய வார்த்தைதான் உண்மையான பஞ்ச் டயலோக்.சுவாமி விவேகானந்தர் பேசியதுதான் அற்புதமான முதலாவது பஞ்ச் வசனமாகும்.அமெரிக்காவில் உள்ள அனைவரையும் சகோதரர்கள் சகோதரிகள் என்று பேசினாரே இதுதான் உண்மையான பஞ்ச் வசனமாகும்.

நூற்றாண்டுகளை கடந்துள்ள நிலையிலும் சுவாமி விவேகானந்தரை இந்த உலகம் மறக்காமல் இருப்பதற்கான காரணம் உலகில் உள்ள பல அறிஞர்களும்,பெரிய நிலையில் உள்ளவர்களும் தங்களது குருவாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.இந்தியாவிற்கு சுதந்திரத்தினைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வெறியை என்னுள் ஊட்டியது சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்களே என்று அன்று மகாத்மா காந்தி கூறினார்.நான் வாழ்ந்த காலத்தில் விவேகானந்தர் வாழ்ந்திருந்தால் அவரது காலடியில் சீடனாக இருந்திருப்பேன் என இந்தியாவின் சுதந்திர வீரர் சுபாஸ் சந்திரபோஸ் தெரிவித்திருந்தார்.சுப்ரமணிய பாரதியார் யாரையும் பகவான் என்று கூறியது கிடையாது.ஆனால் சுவாமி விவேகானந்தரை மட்டும்தான் பகவான் என கூறியுள்ளார்.இவ்வாறு பலபேருக்கு சுவாமி விவேகானந்தர் குருவாக இருந்துள்ளார்.இன்றைய இந்திய பிரதமர்கூட தனது மானசிக குரு சுவாமி விவேகானந்தர் என்றே கூறுகின்றார்.

இந்தியாவின் சினிமா துரையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சூப்பஸ்டார் இருக்கின்றார்கள்.ஒட்டுமொத்த இந்தியாவின் இளைஞர்களுக்கும் மாணவாகளுக்குமான சூப்பர்ஸ்டாராக டாக்டர் அப்துல்கலாம் இருக்கின்றார்.அவருக்கே ஞானகுருவாக இருப்பவர் சுவாமி விவேகானந்தராகும்.சுவாமி விவேகானந்தர் ஒரு தீர்க்க தரிசியாகும்.

சுவாமி விவேகானந்தர் இந்துமத துறவியாக அறியப்பட்டாலும் அனைத்து மதங்களையும் அரவணைத்துச்சென்றவர் அவர்.இஸ்லாத்தையும் இந்துமதத்தினையும் ஒன்றாக இணைத்தவர் சுவாமி விவேகானந்தராகும்.சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் படிக்கும்போது ஓரு புழு கூட புலியாக மாறக்கூடியதாக இருக்கும்.ஏழைகளுக்கு செய்யும் உதவி கடவுளுக்கு செய்யும் உதவியென்று கூறியவர் சுவாமி விவேகானந்தராகும்.ஒருவிடயத்தினை அறிவுகொண்டு சிந்திப்பதை விட உண்மையான உணர்வினைக்கொண்டு சிந்திக்கவேண்டும்.
மட்டக்களப்பில் தமிழர்களை சந்தித்தில் எனக்கு பெருமகிழ்ச்சியாகும்.ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக தமிழ் பேசப்படுகின்றது.நான் தமிழ்நாடு,அங்கு தாய்மொழி தமிழ்தான்,என் இனத்திற்கும் மொழிக்கும் 10ஆயிரம்ஆண்டுகளுக்கு மேல் பழமையிருக்கின்றது. உலகின் மூத்த மனிதன் தமிழன்.அந்த தமிழன் என்பதில் நான்பெருமையடைகின்றேன்.ஆனாலும் தமிழ் கொஞ்சம்கொஞ்சமாக மாற்றமடைந்துவருவதை காணமுடிகின்றது.
இன்று தமிழ் நாட்டில் தமிழின் நிலை வேறுவிதமாகவுள்ள நிலையில் உலகில் கடைசி இலங்கை தமிழன் இருக்கும் வரைக்கும் யாராலும் தமிழை அழிக்கமுடியாது.இதுவே உண்மை இந்தியாவுக்கு மிகப்பெருமையிருக்கின்றது.தர்மச்சக்கரத்தினை தேசியக்கொடியில் கொண்ட பெருமை இந்தியாவுக்N கஉள்ளது.ஒவ்வொரு மதமும் ஒன்றைக்கூறும்போது அன்பை கொண்டு உருவாக புத்தமதம் தோற்றம்பெற்றதும் இந்திய நாட்டில்தான்.இந்தியாவின் பெருமையினை அடுக்கிக்கொண்டுபோகலாம்.

அதேபோன்று இலங்கைக்கும் பல பெருமைகள் இருக்கின்றது.இரண்டாம் நூற்றாண்டில் இருந்து மிகவும் பழமையான பூமி இலங்கையாகும்.35000ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளைகொண்டுள்ள பூமி இந்த இலங்கை பூமி,ஒருநாட்டில் ஒரு வளம் இருந்தால் ஒரு வளம் இருக்காது,ஆனால் அனைத்து வளங்களையும் கொண்ட பகுதியாக இலங்கையுள்ளது.இங்கு அனைத்தும் உள்ள நிலையில் ஒற்றுமையென்பது மட்டும் கொஞ்சம் குறைவாகவுள்ளது.அதனைமட்டும் சரிசெய்யும்போது உலகில் யாரும் வெல்லமுடியாத பகுதியாக இலங்கை மாறும்.
என்தாயை பாதுகாப்பதுபோன்று இலங்கை தமிழர்கள் என் தமிழை பாதுகாக்கின்றீர்கள்.உலகமெங்கும் இன்று தமிழ் பரவியதுக்கு காரணம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துசென்ற தமிழர்களே காரணம்.சுத்தமான தமிழ் உலகமெங்கும் வாழ்வதற்கு காரணம் இந்த மட்டக்களப்பு மண்ணில் இருந்துசென்றவர்களெ காரணமாகும்.