யதார்த்தமான அரசியல் நிலமைக்குள் தமிழ் தேசிய தலைமைகள் வரவேண்டும் -பிரசாந்தன் அழைப்பு

மக்களை தொடர்ந்து உசுப்பேற்றி மக்களிடம் வாக்குகேட்கும் வேலைத்திட்டங்களை மட்டும் செய்வதைவிட்டுவிட்டு யாதார்த்தமான அரசியல் நிலமைக்கு தமிழ் தேசிய தலைமைகள் முன்வரவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் 100 மக்கள் பணிமனைகள் திறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வாக இன்று காலை மட்டக்களப்பு கல்லடி,உப்போடையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மக்கள் பணிமனை திறந்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் கலந்துகொண்டார்.

இதன்போது வறிய நிலையில் உள்ள பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

வரவு செலவு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிகளவு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவை உரிய முறையில் பெண்களுக்கு வழங்கப்படவேண்டும் என இங்கு உரையாற்றிய திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரசாந்தன்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் தெளிவு இல்லாத காரணத்தினால்தான் வருபவர்கள்போவர்கள் எல்லாம் எங்களை ஏமாற்றிக்கொண்டுள்ளனர்.

இன்று வரவு செலவு திட்டம் தொடர்பிலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தொடர்பிலும் பல வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களில் சென்றுகொண்டிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தினைப்பெறும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள்.ஆனால் இன்றுவரையில் எதனையும் நிறைவேற்றவில்லை.

தொடர்ந்தும் சர்வதேசத்தினைக்காட்டி வாக்கும் கேட்கும் நிலையே இருந்துவருகின்றது.அன்று இந்தியாவினை காட்டி வாக்குகேட்டார்கள்,இன்று ஐநாவினை காட்டி வாக்கு கேட்டுவருகின்றனர்.இதே தமிழ் தேசிய கூட்டமைப:பு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சர்வதேச பொறிமுறைக்குள் இல்லாமல் உள்ளுர் பொறிமுறைக்குள்தான் தீர்வுகாணமுடியும் என தெளிவாக கூறிவிட்டார்.

ஆனால் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டில் சர்வதேச விசாரணை நடாத்தப்படும்,குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவோம் இல்லாதுவிட்டால் ஆயுதக்கலாசாரமாக மாறும் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர்.மக்களை தொடர்ந்து உசுப்பேற்றி மக்களிடம் வாக்குகேட்கும் வேலைத்திட்டங்களை மட்டும் செய்வதைவிட்டுவிட்டு யாதார்த்தமான அரசியல் நிலமைக்கு தமிழ் தேசிய தலைமைகள் முன்வரவேண்டும்.

இந்த நிலையில் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் நோக்குடன் வரவு செலவுத்திட்டத்திற்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கிவருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுவருகி;ன்றது.முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது பகுதிகளில் தமக்கான தனி கல்வி வலயங்களையும் பிரதேச செயலகங்களையும் அமைத்துக்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் வரவு செலவு திட்டத்தில் ஆணி வேராக இந்த அரசாங்கம் நம்பியிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பபையாகும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை மக்களை ஏமாற்றாமல் திடமான முடிவினை எடுக்கவேண்டும்.கல்முனையில் தனியான தமிழ் பிரதேச செயலகம் அமைக்கப்படவேண்டும்.கல்முனை தமிழ் மத்தி கல்வி வலயம் அமைப்பதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வரவேண்டும்.அதனையும் சாக்கு போக்குசொல்லி இழுத்தடித்துவிட்டு வரவு செலவுத்திட்டத்திற்கு கையை உயர்த்திவிட்டுவந்தால் எதுவும் நடக்கமாட்டாது.

இம்மமுறை பேரம்பேசும் சக்தி தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது.இம்முறை அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தினை தீர்மானிக்கின்ற பலம் இருக்கின்றது.அந்த பலத்தினை பாவிக்கவேண்டும்.அதற்காகவே தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.

இன்று மாகாணசபைகள் மக்கள் ஆட்சியற்ற நிலையில் பல்வேறு கஸ்டங்கள் எதிர்நோக்கப்படுகின்றது.இன்று மாகாணசபை தேர்தல் நடாத்துவதில் ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்புமே தடையாகவுள்ளது.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் எதனைக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்வது.கிழக்கு மாகாணத்தில் எதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை.மக்களுக்கு எதனையும் செய்யாத நிலையில் திராணியற்றவர்களாக மக்களிடம் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.

மக்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் தமிழ் அரசியல் தலைவர்களின் போலி முகங்கள் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வெளியே தெரியவரும்.கிழக்கு மாகாணசபை தேர்தல் உடனடியாக நடாத்தப்படவேண்டும்.அவ்வாறு நடாத்தப்படும்போதுதான் மக்கள் ஆட்சி மலரும்.