மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு,கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யும் நடவடிக்கையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பக்கச்சார்பாக நடந்துள்ளதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இளம் வீரர்களை புறந்தள்ள ஓய்வுநிலையில் உள்ளவர்களைக்கொண்டு கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தினை பதிவுசெய்துள்ளதாகவும் தற்போது கழகத்திற்காக விளையாடிவரும் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது பிரதேச செயலாளருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அவருக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

எனினும் கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் யாப்பின் அடிப்படையிலேயே இந்த பதிவு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரின் தவறான நடவடிக்கையே இவ்வாறான பிரச்சினைக்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யப்பட்டுள்ளதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கருதுபவர்கள் அது தொடர்பில் நீதிமன்றுக்கு சென்று தெளிவடையமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.