மட்டக்களப்பில் மாகாண கிராம சக்தி வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கான வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஜனாதிபதி வருகைதருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வருகைதராத நிலையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இந்த நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது.

நாட்டு மக்களின் வறுமையை இல்லாதொழிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய 2017 ஆம் ஆண்டில் கிராமசக்தி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

இது தங்கிவாழும் மனோநிலையிலிருந்து மீண்டு மக்கள் சுயமுயற்சியோடு முன்னேறுவதற்குரிய பாதையை வகுக்க உதவியளிக்கும் திட்டமாக அமைவதனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வறுமை ஒழிப்பு திட்டங்களிலிருந்து கிராமசக்தி இயக்கம் மாறுபட்டு காணப்படுகின்றது.

இதற்கமைய எந்தவொரு சிறிய முயற்சியாளர்களும் தமது வியாபாரத்தினை முன்னேற்றுவதற்காக பாரிய நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்பட கிராமசக்தி இயக்கம் வழிகாட்டுகின்றது.

தேவையான நவீன தொழில்நுட்ப அறிவினை பெற்றுகொள்ளல், உள்நாட்டு வெளிநாட்டு சந்தைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளல், கடன் மற்றும் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளல் என்பன கிராமசக்தி இயக்கத்தினூடாக கிடைக்கப்பெறும் நன்மைகளாகும்.

இதனூடாக அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படுவதுடன், அவர்களது உற்பத்திகள் நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் மார்க்கமாகவும் அமைகின்றன. இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய நிகழ்வின்போது கிராம சக்தி தொனிப்பொருள் கீதம் இசைக்கப்படதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்நிகழ்விற்கான வரேவேற்புரையினை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.எஸ்.அபயகுணவர்த்தன அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இத்திட்டம் தொடர்பான நோக்கத்தினை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (பேண்தகு அபிவிருத்தி) சந்திராத்ன பல்லேகம அவர்கள் மிகத் தெளிவாக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தனர்.

கிழக்கு மாகாண கிராம சக்தி நிகழ்ச்சித்திட்ட முன்னேற்றம் தொடர்பான ஆவண காணொளி இதன்போது காண்பிக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டத்தையும் பிரதிபலிக்கும் வண்ணமாக மூன்று மாவட்ட செயலாளர்களும் தமது மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராம சக்தி செயற்திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் தொட்டர்காகவும் தம்மால் எதிர்நோக்கப்படும் பிரச்சிசனைகள் தொடர்பாகவும் தமது முன்னேற்ற அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் பிரதிநிதியாக வருகைதந்திருந்த வடமேல் மாகாண ஆளுநர் சரத் ஏகநாயக்க அவர்களினால் இத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் எவ்வாறான எண்ணக்கருவினை கொண்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றார் என்பது தொடர்பிலும், திட்டத்தின் ஊடக பொது மக்கள் அடையவிருக்கும் நன்மைகள் தொடர்பிலும் இங்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சர் அலிசாகீர் மௌலானாமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் மூன்று  மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதாக இருந்தபோதிலும் அவர் கலந்துகொள்ளாத நிலையில் வடமத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றதுமை குறிப்பிடத்தக்கது.

கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 116 திட்டங்கள் கிழக்கு மாகாணத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கிரம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிராமங்களை அபிவிருத்திசெய்யும் வேலைத்திட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இன்று பகல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் இது ஆரம்பித்துவைக்கப்பட்டது.
சத்துருக்கொண்டான் கும்பிலாமடு பிள்ளையார் ஆலய வளாகத்தில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க மற்றும் கிழக்கு ஆளுநர் கலந்து கொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன் போது பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்;த்து தன்னிறைவு கொண்ட பிரதேசமாக அபிவிருத்திசெய்வது தொடர்பில் ஆராய்ப்பட்டன.

இந்த நிகழ்வின்போது வாழ்வாதார உதவிகளும் மக்களுக்கு வழங்கிவைக்க்பட்டதுடன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்களும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.