தமிழ் மொழியின் சிறப்பினை இப்படியும் பாதுகாக்கலாம் என கூறும் மட்டக்களப்பு பெண்கள்

உலக தாய் மொழி தினத்தினத்திற்கு இணைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு சன நடமாட்டம் கொண்ட பகுதிகளில் திருக்குறள் பொறிக்கப்பட்ட பதாகைகளை அமைக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து மகளிர் சங்கம் மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் இணைந்து இந்த பணியை முன்னெடுத்துள்ளது.

இதன்முதல் கட்டமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட திருக்குறள் பதாகைகள் இன்று காலை திறந்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்துவைத்தார்.

தாய் மொழியான தமிழ் மொழியின் சிறப்பினைக்கொண்டுள்ள திருக்குறளினை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து குறல்களையும் மக்கள் வந்துசெல்லும் பகுதிகளில் அமைக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.