கல்லடி பாலத்தில் வீழ்ந்த சிறுமியின் சடலம் கரையொதுங்கியது

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள மட்டக்களப்பு வாவியில் இருந்து 16 வயது சிறுமியொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் கல்லடி பாலத்தில் சிறுமி ஒருவர் வீழ்ததாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு வாவியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு, நாவற்குடா பூநொச்சிமுனை வீதி, 2 குறுக்கு வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி என்பவரே இவ்வாறு மட்டக்களப்பு வாவியில் வீழ்ந்து காணாமல்போயிருந்தார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் சடலம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள மட்டக்களப்பு வாவியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிறுமியின் காதலன் என கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.