களுவன்கேணியில் மதமாற்ற செயற்பாடு –போராட்டம் நடாத்திய கிராம மக்கள் -நடவடிக்கையெடுக்குமா நிர்வாகம்

மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவி ஒருவரை அதேபாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் இருவரால் கடத்தப்பட்டு குறித்த மாணவி மதத்திற்கு மாற்றப்பட்டு அவரை பெற்றோர்களிடம் ஒப்படைக்க மறுத்துவரும் சம்பவம் கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வெளிப்பாடாக களுவன்கேணியில் ஒன்று திரண்டு மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில்  முன்பாக மேற்கொண்டதுடன் அந்த பாடசாலையில் கல்வி கற்கும் முஷ்லிம் ஆசிரியர்கள் அந்த மாணவியை மூளைச்சலவை செய்து மதம் மாற்றியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் ரவீந்திரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

 மகஜரை பெற்றுக்கொண்ட கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் இது தொடர்பாக தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து கவன ஈரப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் வந்தாறுமூலை பிரதான வீதிக்கு சென்று இந்த சம்பவத்திற்கு எதிராக பலத்த கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்து கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான கி.சேயோன்,குணரெட்னம், செங்கலடி பிரதேசசபை உறுப்பினர்களான தேவராசன்,சுரேந்திரன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி இளைஞர் அணி உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்கள் இளைஞர்கள் என பலதரப்பட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் பாடசாலை என்ன அறபுக்கல்லூரியா? மாற்றாதே மாற்றாதே இஸ்லாம் மதம் மாற்றாதே!, இன ஒற்றுமையை சீர்குலையாதே!, இஸ்லாம் ஆசிரியர்களே இந்து மத மாணவிக்கு குறான் பாடம் கற்பிக்காதே!, மதம் மாற்றிய ஆசிரியர்களை சட்ட நடவடிக்கை எடு!, தமிழ் முஷ்லிம் ஒற்றுமைக்கு வேட்டுவைக்காதே!

இவ்வாறான சுலோகங்களும் கோஷங்களும் அங்கு கலந்து கொண்டவர்களால் முன்எடுக்கப்பட்டன.

இதேவேளை அந்த பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையான கிருஷ்ணகுமார் அங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தமது மகளை பலவந்தமாக களுவன்கேணிவிவேகானந்தாவித்தியாலயத்தில் கடமைபுரியும் முஷ்லிம் ஆசிரியர்களே தமது மகளை திட்டமிட்டு மதம் மாற்றி இவ்வாறான கீழ்தரமான செயலை செய்துள்ளதாகவும் இதற்கு இஷ்லாமிய மத குருமார் பள்ளிவாசல் சமூக பெரியார்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இந்து மத குருக்கள் பலரும் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
சூகளுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய உயர் வகுப்பு மாணவிக்கு நடந்த சம்பவத்தை மீண்டும் தருகிறோம் .

உயர்தரம் கல்விகற்கும் மாணவியான கிருஸ்னகுமார் கௌரிதேவி எனும் மாணவியை அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருவர் குறித்த மாணவிக்கு பலவந்தமாக குறான் கற்பித்துள்ளனர்.
அதன் பின்னர் 29.12.2018 அன்று பின்நேர வகுப்பிற்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவியை ஆசிரியர்கள் இருவரும் காத்தான்குடிக்கு கூட்டிச்சென்று குறான் கற்பித்துள்ளனர் பின்னர் 03.01.2019 அன்று வீட்டில் இருந்து மாணவி காணாமல் போயுள்ளார்.

மாணவி காணாமல் போன விடயம் குறித்து ஏறாவூர் பொலீசில் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அதன் பின் மாணவி பரிதாவுடன் புகைப்படம் எடுத்து பெற்றோருக்கு அனுப்பி உள்ளார். அதன் பின்பு பெற்றோருடன் தொடர்பு கொண்டு நான் குறான் படிக்கன் என்னை தேடவேண்டாம் என்று கூறியுள்ளார்.

தற்போது அந்த மாணவி காத்தான்குடியில் இருப்பதாக அறிந்து பெற்றோர் காத்தான்குடி பொலீசில் முறையிட்டு உள்ளனர்.

அதன் பின்னர் (07ஃ01ஃ2018)ஏறாவூர் போலீசில் குறித்த மாணவி சம்மந்தமாக பெற்றோர் முறையிட்டுள்ளதாக அந்த மாணவியின் தந்தை தெரிவித்தார்.

காத்தான்குடி பொலீஸ்நிலையம் வரும்படி ஏற்கனவே மாணவியை பெற்றோருக்கு காட்டமுடியும் ஆனால் ஒப்படைக்க முடியாது என மாணவியை கடத்திய ஆசிரியர்கள் சார்பாக கூறப்பட்டுள்ளதால் குறித்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களை நம்பி பெற்றோர் பிள்ளைகளை பாடசாலை அனுப்பும் போது ஆசிரியர்கள் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு ஆசை வார்த்தைகளை காட்டி கணனி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் செயற்பாடானது இலங்கை சட்டதிட்டங்களுக்கு முரணானது என்றும் இவ்வாறான ஆசிரியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

களுவண்கேனி பிரதேசத்தில் ஒரு தமிழ் ஆசிரியர் உட்பட சுமார் 6 தமிழ் மாணவிகள் இவ்வாறு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பல தமிழ் குடும்பங்களை இலக்குவைத்து இவ்வாறான மதமாற்றம் இடம்பெறுவதாகவும் இதனை மதவாதிகள் சிலர் ஒரு செயற்றிட்டமாக செய்து வருவதுடன் மதம் மாறும் குடும்பம் ஒன்றிற்கு பத்து இலட்சம் வரை வழங்குவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது குறித்த மதம் மாற்றும் செயற்பாடுகளை பாடசாலைகளிலும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளமையானது கிழக்கு மாகாண நிர்வாகத்தில் ஆதிக்கம் எந்தவகையில் அதிகரித்துள்ளது என்பதனை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளேன தமிழ் ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்பாடசாலைகளில் குறிப்பாக கிராம புற பாடசாலைகளில் கல்வி புகட்டும் ஆசிரியர்கள் தொடர்பாக மிகுந்த கவனம் செலுத்துமாறும் அவதானிப்புடன் இருக்குமாறும் மட்டக்களப்பு இளைஞர் அணியைச்சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.