நிலையான அமைதி ஏற்படவில்லை –பொங்கல் தினத்தில் கவலைப்படும் ஆயர்

நிலையான அமைதி, நிரந்தர தீர்வு புதிய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியோடு வாழக்கூடிய நல்ல நாளை இறைவன் இந்த ஆண்டிலே தரவேண்டுமென மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று காலை தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பங்கு மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த தைப்பொங்கல் விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பங்குமக்கள்,அருட்தந்தையர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு பொங்கல் நிகழ்வினை சிறப்பித்தனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆயர்,

உலகம் புராகவும் இந்த பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்ற விழாவாக அமைகின்றது.

இறைவன் கொடுத்த விளைச்சலுக்காக நன்றி கூறுகின்ற நாளாக இந்த விழா அமைகின்றது.

இறைவன் தந்த நல்ல விளைச்சலுக்காக நன்றி கூறுகின்ற மனப்பான்மை தமிழர்களிடையே இருந்ததை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

எங்களுடைய நாட்டிலே இன்னும் தமிழர்களுக்கு நன்றி இல்லாமல் இருப்பதன் காரணம் இன்னும் எமக்கான ஒரு நிரந்தர தீர்வில்லை என்ற ஏக்கத்தோடு தான் இந்த பொங்கலை நாம் கொண்டாடுகின்றோம்.
எமக்கு ஒரு நிரந்தர தீர்வு எப்போது வரும் என நாம் ஏங்கிக் காத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டிலாவது நிலையான அமைதி, நிரந்தர தீர்வு புதிய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியோடு வாழக்கூடிய நல்ல நாளை இறைவன் இந்த ஆண்டிலே தரவேண்டும்.