மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் 10வது ஆண்டு நினைவுதினம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10வது ஆண்டு நினைவுதினம் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இணையம் அலுவலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சர்வமத பேரவையினை சேர்ந்த கே.சிவபாலன் குருக்கள்,அருட்தந்தை ஜோசப்மேரி, மௌலவி முகமட் இலியாஸ்,அரசார்பற்ற ஒன்றியங்களின் அமைப்பான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன்,காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நூர்தீன் உட்பட ஊடகவியலாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அருட்தந்தை ஜோசப்மேரி அவர்களினால் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உட்பட படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2009ஆம் ஆண்டு லசந்த விக்ரதுங்க படுகொலைசெய்யப்பட்ட நிலையில் இதுவரையில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை தொடர்பிலும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.