மண்முனைப்பற்று பிரதேசசபையின் வரவு-செலவு திட்டம் தோற்கடிப்பு

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பதற்கான அமர்வு இன்று காலை மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் ஆரம்பமானது.

சபை ஆரம்பம் முதல் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன் வரவு செலவு திட்டம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

காரசாரமான பல்வேறு கருத்து மோதல்களைத்தொடர்ந்து 2019ஆம்ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான வாக்கெடுக்கு தவிசாளரினால் கோரப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

17 உறுப்பினர்களைக்கொண்ட மண்முனைப்பற்று பிரதேசசபையில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவாக 06 வாக்குகளும் எதிராக 10வாக்குகளும் செலுத்தப்பட்டதுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் நடுநிலை வகித்ததுடன் வரவுசெலவுத்திட்டம் நான்கு மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

குறித்த வரவுசெலவுத்திட்டம் மீளமைக்கப்பட்டு கொண்டுவரப்படவேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டதுடன் சபை அமர்வுகள் மீண்டும் 26ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.