புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதனை

ஜேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் நேற்று நள்ளிரவு நாடெங்கிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பாலன் பிறப்பினை குறிக்கும் வகையில் தேவபெண்களினால் பாலகன் கொண்டுவரப்பட்டு ஆயரிடம் வழங்கி அதனை தொழுவத்தில் வைத்து பாலன் பிறப்பு நினைவுகூரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கான வழிபாடுகள் ஆயரினால் முன்னெடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்க அருள்ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதன்போது கிறிஸ்மஸ் பண்டிகைக்கான விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் என பிரார்த்திக்கப்பட்டது.

இந்த வழிபாடுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நத்தார் ஆராதனையின்போது இந்த ஆலயத்திலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.