புனித மைக்கேல் கல்விச்சமூகத்தினை துயரத்தில் ஆழ்த்தியது

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் இருந்துவந்த அமெரிக்காவினை சேர்ந்த இறுதி ஜேசுசபை துறவி இன்று காலை காலமானார்.

அமெரிக்காவினை சேர்ந்த புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலர் என்பவரே தனது 94வது வயதில் காலமானதாக கல்லூரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியதில் ஜேசுசபை மிசனரிகளின் பங்களிப்பு என்பது பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்படவேண்டியவையாகும்.

அந்தவகையில் மட்டக்களப்பின் கல்வியின் தூண் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியானது ஆரம்பிக்கப்பட்டு இந்தஆண்டு 145ஆண்டினை தொட்டுள்ளது.

இந்த பாடசாலையினை அமெரிக்க ஜேசுசபை மிசனரிகளே ஆரம்பித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தனர்.இந்த நிலையில் குறித்த பாடசாலை அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில் அந்த பாடசாலையின் இறுதி அதிபராகவும் மேலாளராகவும் அருட்தந்தை அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலர் இருந்துள்ளார்.

கல்வி நடவடிக்கை மட்டுமன்றி யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முன்னெடுக்கப்பட்டுவந்த மனித உரிமை மீறல்களை உரத்துக்குரல் கொடுத்த ஒருவராகவும் இருந்துள்ளார்.

அமெரிக்காவினை சேர்ந்தவராக இருந்தபோதிலும் மட்டக்களப்பு மண்ணை இறுதிவரையில் நேசித்த ஒருவராக அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலர் உள்ளார்.

இவரின் இறப்பு மாவட்டத்தின் கல்விச்சமூகத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புனித மைக்கேல் கல்லூரியிலேயே தங்கிருந்துவந்த இவரது உடலம் அங்கேயே வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிச்சடங்கு தொடர்பா விபரம் விரைவில் அறிக்கப்படும் என பாடசாலை பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.