களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் ஏகாதச ருத்ர வேள்வி

உலக நன்மைக்காகவும் நாட்டில் நீடித்த அமைதியும் சமாதானம் நிலவவும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடாத்தப்பட்டுவரும் ஏகாதச ருத்ர வேள்வியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.

அகத்தியர் பெருமான் திருவானைப்படி சித்தர்களின் குரல் மஹா சித்தர்களின்; ஏற்பாட்டினால் உலக நன்மைக்காகவும் , உலகில் மாபெரும் சித்தர்களின் அருளாட்சி மலரவும் , ஈழவள நாடு மாபெரும் சிவபூமியாகவும் ,ஸ்வர்ண பூமியாகவும் ,குபேர பூமியாகவும் திகழவும் ஏகாதச ருத்ர வேள்வி நடாத்தப்படுகின்றது.

நேற்று இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மகா சித்தர்களினால் இந்த ஏகாதச ருத்ர வேள்வி மிகவும் பிரம்மண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாம் நாளான இன்றும் ஏகாதச ருத்ர வேள்வி சிறப்பான முறையில் நடைபெற்றுவருகின்றது.

ஏகாதச ருத்ர வேள்வியின் அதி சிறப்பாக வேத மந்த்ர தந்திர சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற சதுர்வேத பண்டிதர்களான சிவாச்சார்யார்கள் , தில்லை வாழ் அந்தணர் வழியில் வந்த பல தீக்ஷிதர்களும்,சித்த மரபில் வந்த பல சித்த குருமார்களும் பல ருத்ர உபாசகர்களும் சிவனடியார்களும் இணைந்து ருத்ரஷக்திகளுக்குரிய மூல மந்திரங்கள் , காயத்ரி மந்திரங்கள் , மாலா மந்திரங்கள் , விசேட மந்திரங்கள் , இரகசிய மந்திரங்கள் மூலமாக அக்கினியிலே ருத்ர உபனிஷத்திலே வேள்வி நடாத்தப்படுகின்றது.

வாழ்க்கையில் எப்பாற்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து அருளையும் பொருளையும் வரங்களையும் கேட்பதற்கு முன்னமே அள்ளி கொடுக்க கூடிய வல்லமை இந்த ருத்ர வேள்விக்கு உண்டு என இங்கு சொல்லப்பட்டது.
இந்த யாகமான 22ஆம் திகதி வியாழக்கிழமை வரையில் நடைபெறவுள்ளதுடன் இன்றைய தினமும் ஆயிரக்கணக்கான அடியார்கள் வருகைதந்தவண்ணமேயுள்ளதை காணமுடிகின்றது.