களுவாஞ்சிகுடி நகரில் தனியார் வங்கியின் இரவு பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு ,களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் இரவு நேர பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு குறித்த வங்கியில் பாதுகாப்பு கடமையில் இருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோ.சுகுமாரன் என்னும் 50வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்தலத்திற்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பிரதேச மரண விசாரணை அதிகாரி கே.கணேசதாஸ் மரண விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணம் எவ்வாறு நடைபெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.