பால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு…



கோரளைப் பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் பால்சேனை வட்டார உறுப்பினர் பா.முரளிதரன் அவர்களின் முயற்சியின் பலனாக பால்சேனை கிராமத்திற்கு வாசிப்பு நிலையம் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கி.துரைராசசிங்கம், கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சி.கோணலிங்கம், கோரளைப்பற்று வடக்குப் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி மற்றும் பிரதேச ஆலயங்களின் தலைவர்கள், விளையாட்டு அமைப்புகளின் தலைவர்கள், பிரதேச நலன்விரும்பிகள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கோரளைப் பற்று வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சி.கோணலிங்கம் அவர்களின் ஒத்துழைப்புடன், கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் அவர்களினதும், புலம்பெயர் உறவுகளின் உதவியுடனும் மேற்படி வாசிப்பு நிலையம் உருவாக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பித்து வைக்கப்பட்ட வாசிப்பு நிலைய பொறுப்பாளரிடமும், மாணவர்களிடமும் வருகை தந்திருந்த அதிதிகளினால் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களும் இதன் போது கையளிப்பும் செய்யப்பட்டது.

பால்சேனை மக்களின் வேண்டுகோள் மற்றும் பிரதேச மாணவர்களின் நண்மை கருதி பிரதேச சபை உறுப்பினரால் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.