யாழ் மட்டு மாநகர முதல்வர்கள் தமிழரசு கட்சி செயலாளரை சந்தித்தனர்.



யாழ், மட்டக்களப்பு மாநகர முதல்வர்களுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்குமிடையிலான சந்திப்பு…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 04 மாநகர சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ் மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்களுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் (10) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம்பெற்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நிறைவுற்று மாநகரசபை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இரு மாநகரசபை முதல்வர்களும் இணைந்து கட்சியின் பொதுச் செயலாளரைச் சந்திக்கும் விசேட சந்திப்பாக இது அமைந்திருந்தது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், யாழ் மாநகர முதல்வர் இ.ஆனொல்ட், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான து.மதன், வி.பூபாளராஜா மற்றும் இராசமாணிக்கம் அமைப்பின் தலைவர் சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இரு மாநகரசபைகளின் செயற்பாடுகள் பற்றி மாநகர முதல்வர்கள் பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்தியதுடன், கட்சி நடவடிக்கைகள் மற்றும் வடமாகாண நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.