போரதீவுப்பற்றில் காடுகளுக்கு தீவைத்த பாதகர்கள் -பெருமளவான பறவைள் அழிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பெரியபோரதீவு-பழுகாமம் ஆற்றுப்பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு தீவைக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நேற்று இரவு குறித்த ஆற்றங்கரையினை சூழவுள்ள நாணற்புற்கள் மற்றும் காடுகளில் இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வெளிநாட்டு பறவைகள் உட்பட பல்வேறு பறவையினங்களும் உயிரினங்களும் வாழ்ந்துவரும் நிலையில் இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்திருக்கலாம் எனவும் பல பறவைகள் இடங்களை பறிகொடுத்த நிலையில் அல்லாடிவருதையும் காணமுடிகின்றது.

வயல்வெளிகள் மத்தியில் குறித்த ஆறும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இயற்கை எழில்கொஞ்சம் பகுதியாகவும் இயற்கையின் உறைவிடமாகவும் உள்ள நிலையில் அவற்றினை சீர்குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.யு.ஐ.குணவர்த்தன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி பிரதேச செயலக உதவியுடன்  குறித்த தீயினை கட்டுப்படும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினர் விக்னேஸ்வரன் மற்றும் பிரதேசசபை ஊழியர்களும் பங்குகேற்புடன் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றாடலையும் காடுகளையும் பாதுகாக்கப்போவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றபோதிலும் இவ்வாறான இடங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.