மக்களின் உண்மையான விடுதலைக்காக நிலைப்பாடுகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்களே இனங்கண்டு கொள்வார்கள்…

மக்களின் உண்மையான விடுதலைக்காக நிலைப்பாடுகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்களே இனங்கண்டு கொள்வார்கள்…

(ஜனநாயகப் போராளிகள் கட்சி - மட்டக்களப்பு அம்பாறை)

அனைவரையும் ஒன்றிணையச் சொல்லுகின்ற அதிகாரமானது கூடுதலாக ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கே இருக்கின்றது.

அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய விடயத்தில் நாங்களும் உறுதியாக இருக்கின்ற அதே நேரம் யார் யாருடன் இணைவது, எவ்வாறு இணைவது என்கின்ற பல்வேறு இடர்கள் இருக்கின்றன.

மக்களின் உண்மையான விடுதலைக்காக நிலைப்பாடுகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்களே இனங்கண்டு கொள்வார்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஊடகப் பேச்சாளர் ப.கோணேஸ் தெரிவித்தார்.

இன்று (26) வெல்லாவெளியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 இதன் போது கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் மற்றும் மட்டக்களப்பு பொறுப்பாளர் நா.தீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சிலரைப் பிடிக்கவில்லை என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியில் செல்ல வேண்டியதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் அதிகாரத்திற்குக் கொண்டு வருகின்ற பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது அவர்களின் வாக்குப் பலத்தில் தான் உள்ளது.

தமிழ் மக்களின் நிரந்த அடிப்படை அபிலாசைகளோடு சேர்த்து ஒன்றித்துப் பயணிக்கக் கூடிய தலைமைகளை இதற்குள்ளேயே இருந்து மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

நாங்கள் தமிழ் மக்களுக்கு தெரிவிப்பது ஒன்று தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சிலரின் செயற்பாடுகள் பிடிக்கவில்லை என்றால் அவர்களை நிராகரித்து விட்டு மக்களுக்குப் பொருத்தமான தலைமைகளை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.

பொருத்தமில்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டு நாங்கள் வெளியில் நின்றால் எமது தமிழ்த் தேசிய அரசியல் இருப்புக்குப் பிரச்சனையாகப் போய்விடும்.

வடக்கில் இருக்கும் நிலைப்பாடுகளைக் கிழக்கில் செய்ய முடியாது. கிழக்கைப் பொருத்த வரையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ்ப் பயணிக்க வேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

நாங்கள் எமக்குள் இருக்கும் கசப்புகளை, கருத்து வேற்றுமைகளைக் களைந்து அனைவும் ஒரே அணியாகப் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது.

எனவே எமது மக்கள் எந்தத் தேர்தலாக இருந்தாலும் மிகவும் நிதானமாக, விழிப்பாக இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

 எனவே இந்த விடயத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கின்ற அதே நேரம் மக்களும் தெளிவாகச் செயற்பட வேண்டும்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பாகவும் வேட்பாளர்களைத் தெரிவு செய்துள்ளோம்.

தமிழ் மக்களின் அடிப்படை உணர்வுகளுடன் ஒன்றாகப் பயணித்தவர்கள் நாங்கள் அதற்காகவே வளர்க்கப்பட்டவர்கள்.

தமிழ் மக்களின் அடிப்படை இருப்புக்காக நாங்கள் எமது உயிர்களைக் கொடுத்துப் போராடி, எமது அங்கங்களை இழந்து, போராட்டத்திற்குப் பின்னரான சிறை வாழ்க்கை மற்றும் புனர்வாழ்வு என்றெல்லாம் அனுபவித்து இன்றைக்கும் இருக்கின்றோம்.

இவ்வாறு இருந்த நாங்கள் எமது மக்களை எண்ணாமல் இருக்க முடியாது. தமிழ் மக்கள் இந்த மண்ணில் அச்சமின்றி எங்களை நாங்களே ஆளுகின்ற ஆட்சி அதிகாரத்தைக் கோருகின்ற ஒரு இனம்.

கடந்த காலத்தில் எமது தலைவர் இருமுனைகளில் எமது போராட்ட நகர்வுகளை நடாத்தியிருந்தார். ஆயுதவடிவத்திலான போராட்டம் மற்றும் அரசியல் வடிவத்திலான போராட்டம்.

எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு அரசியல் வடிவப் போராட்டம் தற்போதும் நடந்துகொண்டே இருக்கின்றது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாங்கள் எமது நகர்வுகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

 எல்லா நதிகளும் கடலை நோக்கியே பயணிக்கின்றன அதுபோல எமது அனைத்து முன்னெடுப்புகளும் எமது மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளோடு ஒன்றித்தே இருக்கின்றது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சியை வரவேற்கின்றோம்.

ஆனால் அனைவரையும் ஒன்றுபடுத்துகின்ற, அனைவரையும் ஒன்றிணையச் சொல்லுகின்ற அந்த அதிகாரமானது கூடுதலாக ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கே இருக்கின்றது.

அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய விடயத்தில் நாங்களும் உறுதியாக இருக்கின்ற அதே நேரம் யார் யாருடன் இணைவது, எவ்வாறு இணைவது என்கின்ற பல்வேறு இடர்கள் இருக்கின்றன.

போராளிகள் பல்வேறு தரப்புகளாக உள்ளனர் என்கின்ற குறைபாடு மக்கள் மத்தியில் இருக்கின்றது.

எமது கட்சி யாருக்கும் விரோதமானது அல்ல. கடந்த போராட்ட காலத்தில் பல போராட்டக் குழுக்கள் உருவாகின.

ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்டது மக்களுக்குச் சேவை செய்யக் கூடிய, மக்களின் நலனோடு பயணிக்கக் கூடிய ஒரே ஒரு அமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை மக்களே தெரிவு செய்தார்கள்.

அதே போன்று போராளிகள் மத்தியில் எத்தனை தரப்புகள் இருந்தாலும் மக்களுக்காக, மக்களின் உண்மையான விடுதலைக்காக நிலைப்பாடுகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்களே இனங்கண்டு கொள்வார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்கையில் இருந்து விலகாமல் பயணிக்கின்றது என்கின்ற ஒரு கருத்து இருந்தது.

இதனூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் தற்போது தமிழ் மக்களின் நிரந்தர அடிப்படை அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசுடன் ஒரு இணக்கப்பாடான அரசியல் முறையொன்றைக் கையாளுகின்றார்.
அந்த முறைமையை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

ஏனெனில் கடந்த காலங்களில் நாங்கள் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்பட்டு அரசாங்கங்கள் சில தீர்வுகளை முன்வைக்கின்ற போது அதற்கு தடையாக இருந்தவர்கள் என்கின்ற கருத்து இருந்தது.

எனவே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் நிரந்தர அடிப்படை அபிலாசையான தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய அரசியற் தீர்வினை நோக்கித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பயணிக்குமாக இருந்தால் அதனோடு நாங்களும் தொடர்ந்தும் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.

ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எமக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை.

 எனவே எமது கட்சியுடன் இணைந்து பயணிக்க விரும்பும் அனைத்து முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் இணைய முடியும்.

எமது கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமைலமைச் செயலகம் வெல்லாவெளி கமநல திணைக்களத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படுகின்றன. இதனுடாக அங்கத்துவத்தைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.