மட்டக்களப்பில் கிழக்கு ஆளுனரின் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு நகரில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் வாசஸ்தலத்திற்கு பின்புற பகுதியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இன்று மாலை கிழக்கு மாகாண ஆளுனரின் வாசஸ்தலத்திற்கு பின்புறமாகவுள்ள பகுதியில் நடைபெற்றுவரும் புனரமைப்பு வேலைகளின்போது குழியொன்றை வெட்டியபோது குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலித்தின் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைக்குண்டுகள் கடந்த கால அசாதாரண சூழ்நிலையின்போது மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றின் அனுமதியைப்பெற்று விசேட அதிரடிப்படையின் குண்டுசெயலிழக்கச்செய்யும் பிரிவு மூலம் குறித்த கைக்குண்டுகளை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.