பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலய மகா ரதம் வெள்ளோட்டம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் மிக உயரமான ரதங்களில் ஒன்றாகவுள்ள திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதத்தின் வெள்ளோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தேர் வெள்ளோட்டத்தினை முன்னிட்டு நேற்று காலை முதல் ஆலயத்தில் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த விஸ்வப்பிரம்மஸ்ரீ செல்லையா பாலச்சத்திரன் குழுவினரால் மிகவும் அழகான முறையில் இந்த ரதம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் உயர்ந்த ரதங்களில் ஒன்றாகவும் இந்த ரதம் 39 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்வெள்ளோட்ட ஆரம்பத்தின்போது தேரை உருவாக்கிய சிற்பாசிரியர் பாலச்சந்திரனால் விசேடபூஜைகள் நடாத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஆலய வண்ணக்கர்மார்களினால் வடம்பூட்டப்பட்டு ரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த இரத வெள்ளோட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கனக்கானோர் கலந்துகொண்டனர்.

தேருக்கான விசேட பூஜைகளைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

எதிர்வரும் 02ஆம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.