ஓந்தாச்சிமடத்தில் இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் உள்ள இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஓந்தாச்சிமடத்தில் உள்ள மாரியம்மன் ஆலயம் மற்றும் கற்பக விநாயகர் ஆலயம் என்பனவே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதன்போது மாரியம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பெருமளவான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்குள் இருந்த அம்பாளின் நகைகள் மற்றும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அருகருகில் உள்ள இரு ஆலயங்களும் உடைக்கப்பட்ட சம்பவமானது இப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.