மட்டக்களப்பு-கல்முனை வீதியை மறித்து நின்ற இளைஞர்கள் -ஓடி ஒளிந்த பொலிஸார்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கல்லடி பாலத்திற்கு அருகில் வீதியை மறித்து இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இன்று மாலை கல்லடி பாலத்திற்கு அருகில் போக்குவரத்து பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையிலேயே இந்த நிலையுருவாகியுள்ளது.

கல்லடி பகுதியில் வீதி பாதுகாப்பு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் அப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீது போக்குவரத்து சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுத்தாகவும் அதன்போது வாய்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் விதிமுறைகளுக்கு மீறி நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

எனினும் தமது கடமைக்கு இடைஞ்சல் எற்படுத்திய இளைஞரை வாக்குமூலம் வழங்குவதற்கு அழைத்த நிலையிலேயே இந்த சம்பவத்தினை வேறு திசைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

போக்குவரத்து பொலிஸார் தமது விதிமுறைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்படுவதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இருந்து பொல்லுகளுடன் வந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்யமுற்பட்டதாகவும் அதன்போது இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிவித்தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் இளைஞர்கள் குறித்த இளைஞன் வரும் வரையில் போக்குவரத்தினை அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்து கல்முனை –மட்டக்களப்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததன் காரணமாக ஒன்றரை மணிநேரம் மட்டக்களப்பு –கல்முனை வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்ற நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்றவர் வந்ததன் பின்னரே குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு இளைஞர்கள் அனுமதியளித்தனர்.

இதேவேளை குறித்த பகுதிக்கு சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு பின்னரே பொலிஸார் வருகைதந்து விசாரரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.