சிறி சபாரத்தினம் கிண்ண மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட முன்னாள் போராளிகளின் 32வது ஆண்டு நினைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் “சிறிசபாரத்தினம் கிண்ணம்” மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது.

இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சீலாமுனை யங்கஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏ மற்றும் பி பிரிவுகளை சேர்ந்த 30 உதைபந்தாட்ட கழகங்கள் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றது.

இந்த சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது உதைபந்தாட்ட சங்க மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொடிகள் ஏற்றப்பட்டு மங்கல விளக்கேற்றப்பட்டு உயிர்நீர்த்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வீரர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

இன்றைய சுற்றுப்போட்டியின் ஆரம்பத்தில் மாமாங்கம் ரட்ணம் விளையாட்டுக்கழகமும் பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டது.

இந்த சுற்றுப்போட்டியில் ரெட்ணம் விளையாட்டுக்கழகம் 04-01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

இந்த இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,மாநகர,பிரதேசபையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.