குறிஞ்சாமுனையில் மனைவியை கொலைசெய்துவிட்டு கணவனும் தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை கணவன் மனைவியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறிஞ்சாமுனை 1ஆம் குறுக்கிலுள்ள வீடொன்றிலிருந்து க.வேதநாயகம்(40வயது), மற்றும் அவரது மனைவி ந.லோகநாயகி(28வயது) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவி தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் கணவன் தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இறந்த பெண்ணிற்கு மூன்று மாத கைக்குழந்தையொன்று உள்ளதாகவும் ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இருவருக்கும் இடையில் சண்டை இடம்பெற்றதாகவும் இதன்போது அயலவர்கள் சென்று இருவரையும் சமாதானம் செய்திருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மட்டக்களப்பு குற்ற தடவியில் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.