தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு –மறுக்கின்றார் வேட்பாளர்

தம்மீது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களே தாக்குதல் நடாத்தியதாக ஆரையம்பதியில் தாக்குதலுக்குள்ளான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் எஸ்.சிவசுந்தரம் தெரிவித்தார்.

ஆரையம்பதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் மாணிக்கராஜா என்பவரின் ஆதரவாளர்களே தம்மீது தாக்குதல் நடாத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கள் பிரச்சினையே இந்த மோதலுக்கு காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் மாணிக்கராஜா தெரிவித்தார்.

மண்முனைப்பற்றில் தோல்வியின் விளிம்பினை நெருங்கிவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் இவ்வாறான போலியான பிரசாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது சுமத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் எஸ்.சிவசுந்தரம் என்னும் வேட்பாளர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஆரையம்பதியில் தேர்தல் பிரசார கூட்டத்தினை நடாத்திவிட்டு அவ்விடத்தில் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது தாம் தாக்குதலுக்குள்ளானதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் குறித்த வேட்பாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.