மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ஆறாம் வட்டாரம் கறுவப்பங்கேணி-இருதயபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் முன்பக்கமாகவுள்ள பதாகை இதன்போது எரியுட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

வீதிகளில் எரிந்துகொண்டிருந்த மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு தமது அலுவலகத்தில் இருந்த பதாகையினை எரியுட்டியுள்ளதாகவும் முறைப்பாட்டில் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

தமது வெற்றியை பொறுத்துக்கொள்ளமுடியாதவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வேட்பாளர் காந்தன் தெரிவித்தார்.

இதன்போது அங்கு சென்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளருமான திருமதி செல்வி மனோகரும் நிலைமையினை பார்வையிட்டார்.