தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாநகரசபைக்கு போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 03ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி ரகுநாதன் என்பவரின் கொக்குவிலில் உள்ள தேர்தல் அலுவலகம் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10.30மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்தியவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் என தாங்கள் இனங்கண்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அலுவலகத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் கட்சி கொடியினையும் எரித்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.