தமிழ்மொழி அதிபர் ஒருவரை, ஊவா மாகாண முதலமைச்சர் முழங்காலில்

தனது உத்தரவைப் புறக்கணித்த தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலை அதிபர் ஒருவரை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று, மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்பு (கபே) கோரிக்கை விடுத்துள்ளது.
“பதுளையில் உள்ள தமிழ் மொழி மூல பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை தமது அதிகாரபூர்வ இல்லத்துக்கு அழைத்த ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று வணங்கி மன்னிப்புக் கோர வைத்துள்ளார்.
தாம் அனுப்பிய மாணவி ஒருவருக்கு பாடசாலையில் இடமளிக்காதமைக்காகவே, பாடசாலை அதிபருக்கு ஊவா முதலமைச்சர் இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.
முதலமைச்சரின் பரிந்துரைக் கடிதத்துடன் பாடசாலைக்குச் சென்று மாணவியின் பெற்றோர், அனுமதி கோரிய போதிலும், கல்வி அமைச்சின் உத்தரவுகளுக்கு அமையவே தான் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும் என்று அதிபர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற முதலமைச்சர், அதிபரை அழைத்து முழந்தாளிட வைத்து மன்னிப்புக் கோர வைத்துள்ளார் என்று கபே நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சியில் இதேபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.  இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.